தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் இருந்து கலந்தாய்வை இன்று தொடங்கி வைத்தார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது. இன்று தொடங்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 27 வரை நடைபெற உள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்து ஜூலை 29-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 433 கல்லூரியில் உள்ள 2,33,376 பொறியியல் இடங்களுக்கு இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். அரசு ஒதுக்கீட்டில் 1.99 லட்சம் இடங்களுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்த உள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரப்பூர்வ இணையதளமான www.tneaonline.org என்ற தளத்தில் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதுமான மாணவர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 9 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கலந்தாய்வில் 442 பொறியியல் கல்லூரிகள், தங்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தன. பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 111 பேர் சேர்வதற்கான இடங்கள் உள்ளன.

விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு ஜூலை 29 முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்படுகிறது. செப்.11-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 2023-24-ம் கல்வி ஆண்டில் 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் (2024-25) நடப்பு கல்வி ஆண்டில் 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் 9 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 9 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தரப்படாததால் மூடப்படக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 7.5 சதவீத சிறப்பு பிரிவில் 111 இடங்களுக்கு 664 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 29-ம் தேதி தொடங்கும் பொதுப்பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11-ம் தேதி முடிவடைகிறது. பொறியியல் படிப்புக்கு 2.40 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று கூறினார் அமைச்சர் பொன்முடி.